எப்படி மழைபொழியும்?

மாற்றான் வசை கேட்டு மாசற்ற சீதையை
காட்டுக்கு அனுப்பினான் இராமன் அன்று – தன்
நாட்டின் நீதியைக் காத்திடவே

பசுக் கன்றைக் கொன்றவன் தன் மகன் ஆயினும்
தேர்க்காலால் கொன்றான் சோழன் அன்று – தன்
தேசத்தின் நீதியைக்காத்திடவே

கோவலன் கொலையுண்ட நிகழ்விலே பாண்டியன்
தீதிழைத்தோமென உயிர் துறந்தான் - நாட்டின்
தீதற்ற ஆட்சியை நிலை நிறுத்த

                           ஆனால் இன்று…..

மக்களைக் கொன்றவர் கொள்ளை அடித்தவர்
மார்புதட்டி தங்கள் தலை நிமிர்த்தி - இன்னும்
மனிதர்போல் வாழ்கின்றார் எம்முடனே

நாட்டின் வளத்தையே சூறையாடி வெளி
நாட்டு வங்கிகளில் போட்டவர்கள் - இன்று
ஓட்டுக்கள் கேட்கிறார் எங்களிடம்

பாதையை மாற்றிடும் போதைப்பொருள் விற்ற
பாவிகள் ஒன்றாகக் கூடி மீண்டும் - எங்கள்
பாராள ஓட்டுக்கள் கேட்கலாமோ?

உள்நாட்டு வளங்களை வெளிநாட்டார் நலனுக்காய்
ஒப்பந்தம் செய்து பணம் பெற்றவர்கள் - தங்கள்
ஊழலை மறைக்க எம்மை நாடலாமோ?

செப்பிடமுடியா தீக்குணம் கொண்டோரும்
தப்புக் கணக்கோரும் எம்முடன் வாழ்கையில்
எப்படி மழை பொழியும் எங்கள் நாட்டில்.

எஸ்.பி.நாதன்,
தம்பிலுவில்,