நரைத்த
முடி, நரைத்த தாடி என
பாரம்பரியமாகச் சொல்லப்படும் அனுபவத்தின் அத்தனை குணாதிசயங்களையும், பார்த்த
மறுகணமே கவிஞர் என எண்ணத்
தோன்றும் அமைதியையும் சேமித்த உருவந்தான் கவிஞர்
கா.சிவலிங்கம். மூக்குக் கண்ணாடியின் கறுத்தச் சட்டத்தினூடு தெரியும் காந்தக் கண்களின் பார்வை
இவரின் கம்பீரத்தை அணிசெய்யும்.
நான் இலக்கிய உலகில் நுழைந்ததில் இருந்து
அனைத்து நிகழ்வுகளிலும் சந்திக்கக்கூடிய நபர்களில் இவரும் ஒருவர். இலங்கை
அரசின் கலைஞர்களுக்கான உயரிய
விருதுகளில் ஒன்றான ''கலாபூசனம்"
விருதின் சொந்தக்காரர். தனது கவிதைத் திறனால்
மண்முனை வடக்குப் பிரதேச செயலக கலாசாரப்பிரிவினால்
வழங்கப்பெற்ற ''தேனகக் கலைச்சுடர்" விருதினைத்
தனதாக்கிக் கொண்டவர். கவிதை, கட்டுரை, நாடகம்,
மெல்லிசைப்பாடல், ஆய்வு, நடிப்பு, நகைச்சுவைக்
கதை, எனப் பல்வேறு தளங்களில்; தமது
படைப்பாற்றலை வெளியிட்டிருக்கும் ஒரு கலைஞர், இலக்கியவாதி.
இருப்பினும் கவிதையே இவரது பிரதானம்.
இன்றுவரை புதுக்கவிதைகளால்
கற்பழிக்கப்படாதவை இவரது கவிதைகள். இவரின்
நாளாந்த கடமைகளில் நூலகம் செல்வதும் வாசிப்பதும் ஒன்றாகிப்
போனவை.
அது ஒரு றம்மியமான
மாலை. மட்டக்களப்பின் பொதுநூலகத்தின் அருகில் உள்ள காந்திப்பூங்கா. வாவியை முத்தமிட்ட காற்று
என்னையும் கட்டித் தழுவியபோது உடலுக்கு
மட்டுமல்ல மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டிருந்தது.
ஐயாவுக்கு நாம் நிகழ்வொன்றுக்காய் அழைப்பிதழ்
அனுப்பியிருந்தோம். வழமை போலவே விழாவின்
நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தார். ஐயாவை வரவேற்கும்போது எனது
காதில் ''நான் ஒன்றும் கள்ளனின்
மகனல்ல" என்றார். அப்போது அவர்முகத்தில் புன்னகை
உதிராமலேயே இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை
மீண்டும் என்னவென்று கேட்டேன் '' கடிதம் எழுதும்போது கானா
சிவலிங்கம் என்று எழுதாமல் காவன்னா
சிவலிங்கம் என்று எழுதுங்கள்" என்றார்.
அப்போதும் அவர் முகத்தில் அதே
புன்னகை சற்றும் குறையாமலேயே இருந்தது. அதன்
பின்னர் ஒவ்வொரு முறையும் அவருக்கு
முகவரி எழுதும்போதும் இந் நிகழ்வுடன் அவரையும்
மீட்டிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இப்படியான
கவிஞருடனான எனது சின்னச்சின்ன ஞாபகங்களை
அசைபோட்டு மட்டக்களப்பு வாவியின் அழகை இரசித்துக்கொண்டிருந்த என்னை ''தம்பி
என்ன யோசனை" என்ற குரல் வழமைக்குத்திருப்பியது.
கடிகாரத்தைப் பார்த்தேன் சரியாக 4 மணி. நான் அவரைச்
சந்திக்க வருவதாகக் கூறிய அதே நேரம். அவர்
வரும்போது அவரின் நடையை எமது
கமராவுக்குள் சிக்க வைத்துவிடவேண்டும் என்பதற்காக
நாம் பூங்காவிற்கு நேரத்திற்குச் சற்று முன்னதாகவே வந்திருந்தோம்.
நிகழ்வுகளுக்கும் அப்படியே. இவர் பிந்தி வந்ததை
நான் பார்க்கவில்லை. என்பதையும் அந்தச் சிறிய இடைவெளிக்குள்
நினைத்துக்கொண்டு கவிஞரை
எனதருகாமையிலேயே அமரும்படி கூறினேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தான் எழுத்துலகில் கால் பதிக்கவென உந்துதலளித்த ஏதோ ஒரு எழுத்து அமைந்திருக்கும் எமது கவிஞருக்கு அது மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதமாக அமைத்திருக்கிறது. இதே போல் தன்னை ஊக்கப்படுத்தியவர்களுள் முக்கியமானவராகஇராஜபாரதி என அழைக்கப்படும் தனது தமிழாசான்; வி.கி.இராசதுரை அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கவிஞர் என்றால் கவிதை பற்றித்தான் பேச வேண்டுமா என்ற கேள்விக்கு நிச்சயமாக என்னிடமிருந்த விடை இல்லையென்பதுதான். இதனால் எமது பேச்சு வேறு வேறு தளங்களில் மிகவும் சுவாரசியமாகச் சென்றது.
முன்பெல்லாம் பிறந்த ஆண்டு சரியாகத்
தெரியாதோர் தமது பிறந்த ஆண்டை
சொல்லும் போது ''யப்பான் குண்டு
போட்ட ஆண்டில் பிறந்ததாக சொல்வார்கள்...."
என்று தொடங்கிய கவிஞர்
தமது சிறு பராய நிகழ்வுகளை
மீட்கும் கணங்களில் சிறுவனாகவே மாறியிருந்ததுடன் நினைவுகளுடன் என்னையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச்
சென்றிருந்தார்.
ஆங்கில
ஆசிரியராக வருவதற்கு விரும்பிய கவிஞரின் பாதை கணக்கியல் துறையிலேயே
முடிவுற்றது. இருந்தும் அவரது இலக்கிய வாழ்வைவிட
அவரின் கணக்கியல் வாழ்வே மிகவும் சுவாரசியமானது.
HSC படித்துவிட்டு காகித ஆலையில் ஒரு
கூலித்தொழிலாளியாகவே சேர்த்து படிப்படியாக அங்கு கடதாசி அடுக்கும்வேலை,
நிறுவையாளர், எழுதுவினைஞர், கணக்கியல் உதவியாளர் என படிப்படியாக முன்னேறியிருக்கிறார்.
அப்போதுதான் தான் இன்னும் படிக்க
வேண்டும் என்ற எண்ணம் தேன்ற,
1988 இல் AAT படித்து அதில்
சித்தியும் பெற்றிருக்கின்றார். ஒவ்வொருமுறையும் அவர் சித்திபெற்ற செய்தியை
அறிந்து கொள்ளும் முறை மிகமிகச் சுவாரசியமாயிருந்தது.
தான் வேலை முடிந்து வீட்டுக்கு
வரும்போது வாசலில் தன் மனைவி
நின்று வாழ்த்து தெரிவித்தால்;, தான் சித்தி பெற்றிருப்பார்
என்று அர்த்தமாம். உங்களைப்போலவே எனக்கும் இது எப்படிச் சாத்தியம்
என்ற வினா எழுந்தது. அதற்றும்
விடை அவரிடமிருந்தே கிடைத்தது. ''அப்போதெல்லாம் தபாலில் மட்டுமே பரீட்சை
முடிவுகள் வரும் அந்தத் தபாலை
அவதானே முதலில் பார்ப்பார்" எனக்
கூறிச் சிரித்த அவரிடம் ''சித்திபெறவில்லை
என்றால்...." எனத் தொடர்ந்தேன்.. அதற்கு
முன்பைவிட அதிகமாகச் சிரித்துக்கொண்டே '' வேறென்ன பேச்சுத்தான்...." என்றார்.
அப்போது தன் மனைவியின் நினைவு
வந்திருக்க வேண்டும் அவர் கண்களில் சின்ன
மாற்றத்தை உணர்ந்தேன். உனர்வுகளை இடைமறித்து மீண்டும் அவர் தொழில் பக்கமே
எனது வினாவைத் திருப்பினேன். கவிஞர் மீண்டும் தனது
அதே உற்சாகத்துடன் தான் இலங்கைப் பட்டயக்
கணக்கறிஞர் நிறுவகத்தின் ''லைசென்ஸியேற்" தரத்தில் சித்திபெற்றதை கூறும்போது மீண்டும் கவிஞரின் கண்களில் கண்ணீரைக் கண்டேன். நிச்சயமாக அதன் சுவை இனிப்பாகத்தான்
இருந்திருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் முருகனுக்கு நன்றி
சொல்லவும் கவிஞர் மறக்கவில்லை. முருகனுக்கு
என்ன இலஞ்சம் கொடுத்தீர்கள் எனக்
கேட்க நினைத்தேன் அன்று கேட்கவில்லை மீண்டும்
கவிஞரைச் சந்திக்கும் போது நிச்சயம் கேட்டுவிடுவேன்.
வேப்பம் பூவிலும் சிறு
தேன்துளி இருப்பது போன்றே தான் பாடசாலைக்
காலத்தில் எழுதிய கவிதைக்கு மூன்றாம்
பரிசு பெற்றதை மிக மகிழ்ச்சியுடன்
கூறும் கவிஞர், அதற்கு தியாகராசா
ஆசிரியரிடமிருந்து பெற்ற பரிசான அவரின்
கையெழுத்திட்டு வழங்கிய
பாரதியார் கவிதைகள் நூலை தான் தவறி
விட்டதை என்ணி வருத்தப்படுகின்றார்.
அண்மையில்
நீங்கள் சிலாகித்த கவிதைகள் யாருடையன? என்ற எனது கேள்விக்குச்
சற்றும் நேரமெடுக்காது கவிஞர்களான கௌரிதாசன், தாமரைத்தீவான், நிலா தமிழின்தாசன் ஆகியோரின்
பெயர்களைக் சட்டென்று குறிப்பிட்ட கவிஞரின் வாசிப்பு பற்றி நயக்காமல் இருக்க
முடியவில்லை.
இதுவரை 9 நாடகங்கள் எழுதியருக்கும் இவரிடமிருந்து நாடகம் தொடர்பாக பல
சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்ட பின்னர்தான் இந்தக்
கேள்வியை ஆரம்பத்திலேயே கேட்டிருக்கலாம் என என்னுள் நினைத்துக்
கொண்டேன். ஏனென்றால் அவை இன்னும் சுவையானதாக
இருந்தன. '' நான் ஒரு நாடகத்தில்
வைத்தியராக நடித்திருந்தேன்... அப்போது “ஸ்ரெதஸ்கோப் " வைத்து ஒரு நோயாளியைப்
பார்க்க வேண்டும் அப்படி நான் பார்த்துக்
கொண்டிருக்கும் வேளையில் சபையில் எல்லோரும் பலமானச்
சிரித்துக் கொண்டிருந்தனர்.... " எனக் கூறும் போதே
கவிஞரும் தன்னை மறந்து சிரித்துவிட்டார்
அந்தச் சிரிப்புக்கு எத்தனை கோடியும்
கொடுக்கலாம் போலிருந்தது. ஆனந்தத்தின் உச்சம் அது வெள்ளை
மனதின் வெள்ளித்திரை அது. ஏன் என்று
நான் யோசிக்கத் தெடங்கும் முன் தான் ''ஸ்ரெதஸ்கோப்"
ஐ காதில் வைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தமையே சபையோரின் சிரிப்புக்குக் காரணம் எனக் கூறியவாறே.
அதிலிருந்து நாம் எதைச் செய்தாலும்
அதை பல முறை பயிற்சி
செய்துதான் செய்யவேண்டும். என்ற படிப்பினையைத் தான்
பெற்றதாகவும்க கூறினார். என்னுடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து நான் ஒன்றை விளங்கிக்
கொண்டேன். இவரின் வெற்றிக்கு இவர்
பெற்ற தோல்விகளையே படிக்கற்களாகப் பயன் படுத்தியிருக்கிறார். இவரின்
சுவாரசியப் பேச்சினிடையே நான் தயார் படுத்தி
வந்து மறந்திருந்த '' உங்களை மிகவும் மகிழ்ச்சிப்
படுத்திய நிகழ்ச்சி எதுவென்ற கேள்வியை கேட்டபோது, 2008 இல் மண்முனை வடக்கு
கலாசாரப் பேரவையினால் கிடைக்கப்பெற்ற கலைஞர் கௌரவத்தினை நன்றியுடன்
நினைவு கூர்ந்தார். இது உங்கள் ''முகம்காட்டும்
முழுநிலா நூல் வெளியீட்டுக்குப் பின்னர்
நிகழ்ந்தது தானே" என நான் கூறியதும்
நான் அவர்பற்றித் தெரிந்து வைத்திருப்பது குறித்து நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார் என
எண்ணுகிறேன். அது தானே ஒரு
கலைஞனுக்கு அல்லது எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய
மிகப் பெரிய மகிழ்ச்சி.

தான் சற்றும் எதிர்பாராத
இந்தச் சந்திப்பு பற்றி தனது மகிழ்ச்சியைத்
தெரிவித்த அவரிடமிருந்தும் றம்மியமான சூழலை எமக்களித்த காந்திப்பூங்காவினருகிலிருந்த
ஆற்றின் சலசலப்பிலிருந்தும் வெளியேறும் போது கடிகாரத்தின் இரு
முட்களும் ஆறிலேயே
ஒன்றித்திருந்தன. என்னைப்போன்றே.
நேர்காணல் : ச.பா.மதன்
ஒளிப்படங்கள் : க.டணிஸ்கரன், ச.பா.மதன்