உப்போடை ஈன்றளித்த
உத்தமனாம் சிவலிங்கம்
எப்பெரும் கதை சொல்லி
என்றறிந்து வாழ்த்துகிறேன்
சின்னம் சிறார்கலெல்லாம்
சிரித்தகமே மகிழ்ந்திடும்
வண்ணம் பல கதை கூறி
சிந்தித்து வாழச்செய் சிகரம்
கடுகளவு உருவென்றாலும்
கடும்சொல் உரப்பேற்றி
தொடும் நெஞ்சதிற் பதியத்
தரும்பெரு தகைமையாளன்
நடிப்பாலும் கதை – நா
நவிலும் சொல்லாளும் கதை
துடிப்போடு சொல்லிச் சிறார்
துயர் நீக்கும் பேராசான்
வெடிப்பொலியாய் வரும்
வீரத் தமிழ் முழங்க
நடிப்பாலுமது விளக்கும்வகை
நல்லதொரு கதை சொல்லி
படிக்கும் பாலருக்கும்
படிப்பினைகள் சொல்லும் கதை
படித்தவரும் திருந்தும் வகை
பற்பல வகையிற் கதைசொல்லி
வெண்ணுடை தரித்த மகான்
வீர்விளை நிலம் தந்த மகன்
வித்தகன் வாழ்ந்த மண்
வீரத்தமிழ் வேரிடச் செய்தவன்
கண்ணு படும் உனக்கு
கதை கூறும் பாங்கதற்காய்
என்னாளுமுனை நினைப்பேன்
எந்தனுக்கும் நீ எந்தை
மாமா என்றெம் மழலையெலாம்
மகிழ்வோடு அழைக்கும்
மாஸ்டர் சிவலிங்கமையா
மா புகழ் ஓங்கச் செய்வோம்
திரு.க.முரளிதரன்(வில்லூரானர்)