உன்னை நீ தெளி





















உன்னைநீ    தெரிந்துகொண்டால்
உள்ளத்தில்     தெளிவமையும்
உன்னைநீ    புரிந்துகொண்டால்
உலகத்தில்    வழியமையும் !

பிறராலே    உயர்ந்திட்டோம்
பின்னடைந்தோம்    என்கின்ற
வறண்டமன    வாட்டங்கள்
வருகின்ற   நிலைமாயும் !

ஆசைக்கு     அணையிட்டே
ஆக்கத்தில்    வினையாற்றின்
பூசைக்கு    மலர்குவியும்
உயர்வெற்றி    தலைபாயும் !

மெய்யிற்குத்     துணைநின்று
நேர்மைக்குக்    கைகொடுத்து
பொய்யிற்குத்    திரையானால்
புகழுந்தன்    கால்சாயும் !

ஈனத்தில்     மயங்காது
இருள்தன்னில்     நுழையாது
மானத்தின்    உள்ளிருந்தால்
மதிப்புன்னைத்    தேடிவரும் !

அறிஞர்கள்    கூட்டத்தில்
அனைவருமே    புகழ்பாடும்
குறியாக      நீயிருந்தால்
குன்றத்து    விளக்காவாய் !


பாவலர்  கருமலைத்தமிழாழன்