காலங்களைக்
கரைத்துக் குடித்த
கரும்பாறையென
கால் பரப்புகிறாய்…
மதர்த்த மார்புகளும்
புடைத்த புருவமும்
நெடித்த
மயில் கழுத்தின் நீலமுமாய்
வெட்டி நடக்கிறாய்
குளிர் இரவைச் சூடாக்கி
சுடும் பகலை இரவாக்கி
பகலிரவெங்கும்
படர்ந்து கிடக்கிறாய்
என்னில்
பாறையாகவும்
படரும் பாசியாகவும்
நீயே இருந்திருக்கிறாய்
காலம் பிழைத்தெழும்
காலமெலாம்
விழித்திருந்து முத்தமிடவும்
மீண்டும் முயங்கவும்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...
மன்னார் அமுதன்