தமிழகத் தமிழாசிரியர் கழக மாநில மதிப்பியல் தலைவரும், ஒசூர் தமிழ்ச்சங்கச் செயலாளரும், இருபத்தைந்திற்கும் மேற்பட்ட கவிதை, ஆய்வு நூல்களை எழுதியவருமான பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களின் ஐம்பதாண்டு கால இலக்கியப்பணி, அவர்செய்த தமிழ்த்தொண்டு, அவர் எழுதிய நூல்கள் பற்றிய திறனாய்வு அடங்கிய அவரின் வாழ்க்கை வரலாற்றை மலேசிய நாட்டின் மலாயப் பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நூலாக்கம் செய்தன.
அந்த வரலாற்று நூலை 11 – 08 – 2017 அன்று மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகக் கருத்தரங்கு மண்டபத்தில் மலேசியா நாட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்கள் வெளியிட, முனைவர் திருவித்யா நூலினை ஆய்வு செய்து உரைநிகழ்த்த , மலாயப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் குமரன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க பாரி ஆகியோர் பாவலர் கருமலைத்தமிழாழனுக்கு விருது வழங்கி சிறப்பு செய்தனர். கவிஞன் இணைய இதழும் பாவரரை வாழ்த்துவதில் உவகை கொள்கிறது.