கவிஞர் நிலாதமிழின் தாசன்




இது போதும்எனக்கு – உனை வாழ்த்தும்
இது போதும் எனக்கு – வேறு எது வேண்டும்
ஐம்பத்தி மூன்றில் நின்பிறப்பு – உன்
கவித்துவம் முட்டுது வான்பரப்பு
உன்னால் தான் இம் மண் சிறப்பு
உண்மையிது உனக்கேன் புன் சிரிப்பு
நிலா தமிழின் தாசன்
பெயரின் முன்னால் ஒரு குளிர்ச்சி
உன்னோடு பேசுகையில் தன்னால் வரும் மகிழ்ச்சி
உன் கவியால் பெற்றது தமிழினம் அன்றொரு எழுச்சி
இந் நாள் பெறுகிறது களுதாவளை ஒரு உயர்ச்சி
உன் கவித்துவம் காணாது என்றுமே இனி வீழ்ச்சி
செபமாலை பெற்ற அருள்மொழி ராஜா – கவித்
தோட்டத்தில் எப்பவும் நீதாண்டா ரோஜா
உலகத் தமிழர் கவிதைத் தொகுப்பாம்
“செம்மாங்கனி” கண்ட தென்தமிழ்க் கவிக்கோ
உன்கவி என்ன சிந்தனை தெறிக்கும் தீந்தமிழ்த் தெறிப்போ?
கவிதையால் உலகுக்கு அணி செய்தாய் – புனை
கதைகளால் தமிழுக்குப் பணிசெய்தாய் – உன்
துணிவினால் தமிழரின் பிணி கொய்தாய்
தரணியை என்றுமே நீ வெல்வாய்
மஞ்சுளா மணாளன் நீ
பிஞ்சிலே கவிஞன் நீ – எதற்கும்
அஞ்சிடா நெஞ்சன் நீ – பிர
பஞ்சத்தை விஞ்சுவாய் நீ
நாட்டிலும் காட்டினாய் உன் திறமை – சீன
நாட்டிலும் காட்டினாய் உன் திறமை – வில்லுப்
பாட்டிலும்  காட்டினாய் உன் புலமை
காட்டிலும் முட்டிலும் ஓட்டிய பகைவனால்
களு தாவளை வீட்டினை நீயமைத்தாய் – இப்போ
ஏட்டிலும் ரோட்டிலும்  உன்பெய்தானடா
காவிய சிறி நீ தங்கக் கவி -எமை
மேவிய கவி நீ எமக்கேது பங்கம் இனி